என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Thursday, April 11, 2013

சாதியை பற்றிய பிரகாஷ்ராஜின் பேச்சு- (விடியோ இணைப்பு )


சாதி'ங்கிறது ஒரு ஊரைத்தாண்டி, மக்களைத் தாண்டி இப்போ இன்டெர்நெட் வரைக்கும் வந்துடுச்சி’ என்று கூறினார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
'தோனி' படத்தை தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்திருக்கும் புதிய படம் தான் ’கெளரவம்’. அவருடைய கம்பெனி டைரக்டரான ராதாமோகன் டைரக்ட் செய்திருக்கும் இந்தப்படத்தில் முதல் முறையாக தமிழில் ஹீரோவாக அறிமுகமாகிறார் பிரபல தெலுங்கு ஹீரோவான அல்லு சிரிஸ். ‘விக்கி டோனர்' புகழ் யாமினி குப்தா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் வருகிற 19-ஆம் தேதி ரிலீஸாகிறது.


இதற்கிடையே இந்தப்படம் வன்முறையை தூண்டும் விதமாக தர்மபுரி கலவரம் சம்பந்தமான சாதிப்பிரச்சனைகளை வைத்து எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் இந்தப்படத்தை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் என்றும் புதிய பிரச்சனை எழுந்தது.
ஆனால் இந்தப்படம் குறித்து பேசுவதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்த பிரகாஷ்ராஜ் இந்தப்படத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாக எந்த ஒரு சாதிய விஷயங்களும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்.
மேலும் படம் குறித்து அவர் கூறியதாவது :
அசிங்கம் எங்க இருந்தாலும் அசிங்கம் அசிங்கம் தானே? நேரடியாக தர்மபுரியையும், அங்கு நடந்த கலவரத்தைப் பற்றியும் நாங்க இதுல சொல்லல, ஆனா அந்த அசிங்கம் அங்க நடந்திருந்தால் அதுவும் அசிங்கம் தான்.
இந்தப்படம் எடுக்கும் போது சாதிங்கிறது ஒரு ஊர்ல இருக்கும், மக்களுக்கு நடுவுல இருக்கும்னு நெனைச்சேன். ஆனால் அது இப்போ இன்டெர்நெட் வரைக்கும் வந்துடுச்சி.
ரீஸண்ட்டா என்னோட பேஸ்புக், ட்விட்டர் அக்கவுண்ட்டை பார்த்தீங்கன்னா சிலர் என்னை மிரட்ட ஆரம்பிக்கிறாங்க “இப்படி ஒரு படம் ஏண்டா எடுக்குறீங்க?ன்னு கேட்கிறாங்க, நீ ஒரு கன்னடக்காரன் இப்படி ஒரு தமிழ்ப்படத்தை எடுக்க உனக்கு என்ன இருக்குன்னு கேட்கிறாங்க?

நான் அவங்களுக்கு சொன்னேன் நான் கன்னடக்காரனா, தமிழனாங்கிறது முக்கியம் கிடையாது. இந்த உலகத்துல உயிரை எடுக்கணும்னா தற்கொலையே குற்றம்னு சொல்லுது சட்டம். உன் உயிரை எடுக்கிறதுக்கே உனக்கு உரிமை இல்லை அப்படி இருக்கும்போது நீ எப்படி இன்னொருத்தரோட உயிரை எடுக்கிறதுக்கு தயாராக முடியும்.

என்னுடைய ஆதங்கம் இதுதான், சின்ன வயசிலேர்ந்து ஒரு குழந்தையை பெத்து, வளர்த்து ஆளாக்கின பிறகு அதுக்கு சாப்பாடு ஊட்டிருப்பீங்க, பாடல் பாடியிருப்பீங்க, தாலாட்டு பாடியிருப்பீங்க, அப்படி பார்த்து பார்த்து செல்லமாக வளர்த்த அந்த குழந்தை வளர்ந்து ஆளான பிறகு தன்னோட கணவனை தேடி அல்லது அவன் அவனுடைய காதலியை தேடி கல்யாணம் பண்ணிக்கும்போது மனசுக்குள்ள வர்ற இந்த கெளரவக்கொலை என்பது ரொம்ப மோசமான மனநிலை.
உங்களுக்கு நேரடியா சம்பந்தப்பட்டதை இந்த படத்தோட கதையாக நான் எடுக்கல, ஆனால் இந்த படத்துல சொன்ன அசிங்கமும், அவமானமும், மோசமான விஷயங்களும் உங்களுக்குள்ள இருந்தால் ஆமாம் அது உங்க சம்பந்தப்பட்ட கதை தான்.
ஆனால் இந்த மாதிரியான மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்படவில்லை.
நீ யாருய்யா இந்தக்கதையை சொல்றதுக்குன்னு சிலர் கேட்கிறாங்க?
நான் சொல்லாம வேற யார் சொல்லுவா? அசிங்கமா இருக்கு அதை அசிங்கம்னு சொல்றேன், கற்பழிப்பு தப்புன்னு சொல்றேன், அதை சொல்லக்கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யார்? கொலை செய்றதுன்னு தப்புன்னு சொல்றேன், அதை சொல்லக்கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யார்? அதை நான் சொல்வேன் அது என்னோட பொறுப்பு என்னோட கடமை.
கெளரவம்ங்கிற பேர்ல செய்யப்படுகின்ற கொலைகள் தவறான விஷயமாகும். அது உன் வீட்ல நடந்தாலும் தவறுதான். அல்லது வேற எங்காவது நடந்தாலும் அது தவறுதான்.
இங்க எல்லாருக்கும் பொறுமை குறைஞ்சிக்கிட்டே வருது. எங்க ஊரைப்பத்தி படம் எடுக்கிறீங்களாமே? எங்களைப்பத்தி படம் எடுக்கிறீங்களாமே?ன்னு கேட்கிற உரிமையை உனக்கு யார் கொடுத்தது?
பொறுமையா இருங்க, நாங்க எடுக்கிறோம் பார்க்கிறவங்க பார்க்கட்டும்னு சொல்ல வேண்டியிருக்கு. அப்போ ஒரு படைப்பாளியோட சுதந்திரம் எங்கே போய்க்கிட்டிருக்கு? அவனுக்கான உரிமை எந்த அளவுக்கு இருக்கு? இப்படி ஆளாளுக்கு கேள்வி கேட்கிறதுனால ஒரு படைப்பாளியோட கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுது. ஆனால் கருத்து சொல்ற உரிமை எல்லாருக்கும் இருக்கு. உனக்கு எப்படி எங்களை திட்டுற உரிமை இருக்கோ, அதேமாதிரி தான் எங்களுக்கும் ஒரு விஷயத்தை சொல்ற உரிமை இருக்கு.
இந்தப்படத்தை பார்த்து விட்டு வெளியில் வரும்போது உங்களுக்குள்ள பல கேள்விகளை எழுப்பும். படத்தில் சாதிப்பிரச்சனையை நாங்கள் சொல்லவில்லை, கெளரவக்கொலை தவறுங்கிறதைத் தான் சொல்கிறோம்.
இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.

No comments:

Post a Comment